ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

திருவருண் முறையீடு - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

 திருவருண் முறையீடு - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த வாரம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் ஆறாவது நூலாகிய திருவருண் முறையீடு.

பதிக அமைப்பு:

கட்டளைக் கலித்துறை விருத்தத்தால் பாடப்பட்ட 232 பாடல்களைக் கொண்ட முறையீட்டு தொகுப்பு ஆதலினால் இது திருவருண் முறையீடு என வழங்கப்படுகின்றது. திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை முதல் திருமுறையில் ஆறாவது நூலாக வைத்துச் சிறப்பித்தார். தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிய நூல் மூன்றாம் திருமுறையுள் ஆறாவது நூலாக இடம்பெற்றுள்ளது.

வள்ளல் பெருமான் எழுதிய மூல ஏடு இந்நூலுக்கு கிடைத்திருப்பதாக பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ணனார் அவர்கள் தெரிவிக்கின்றார். வள்ளல் பெருமான் அருளிச்செய்த மூல ஏட்டின் படியே தொழுவூர் வேலாயுதனார் அவர்களும் ஆ.பாலகிருஷ்ணனார் அவர்களும் பதிப்பித்து இருக்கின்றார்கள்.

இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும்  தொழுவூர் வேலாயுதனார் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, இப் பாடல்களை உணர்ந்து ஓதும் அன்பர்களுக்கு, வள்ளல் பெருமானின் உண்மை கருத்துக்களை உணர உதவியாய் உள்ளது என்பது இங்கு நினைக்கத்தக்கது. 

பதிகச் சிறப்பு:

இப் பதிகத்தை தன்னுடைய ஏழாம் புத்தகமான பெருநூல் பகுதியில் பதிப்பித்த ஆ. பால கிருஷ்ணனார் அவர்கள் இப்பதிகத்தின் சிறப்பினை தமக்கே உரித்தான, அழகிய தமிழில் அருள் நிலையில் நின்று விளக்கியிருக்கிறார்கள்.  இது இப்பதிகத்தை முழுமையாக உணர்வதற்கு நமக்கு பெரிதும் துணை நிற்கின்றது. அப்பகுதி வருமாறு:

 "திருஅருண் முறையீடு என்னும் இவ்வருள்நூலில், நம் பெருமான் இராமலிங்க அடிகளார், 

தம் குற்றம் குறைகளை எடுத்தெடுத்துப் பகுத்துப் பகுத்து விரித்து விரித்து, 

தம்மை நொந்து வருந்தியும், 

உலகியலானது ஒருவனை மாயை வயப்படுத்தி, உயிர்களுக்குள் வேற்றுமையையும் வெறுப்பையும் கற்பித்து, நெஞ்சைக் கல்லாக்கி, கொலைபுலைக்கு ஆளாக்கி, இழிவுபடுத்தி, அழித்துவிடுகிற தென்று இரங்கியும், 

வழிஅடியர்களுடைய என்புருகும் பேரன்பையும் அளப்பரும் திறலையும் அகம்நெகிழ்ந்து பெருமிதம் கொண்டுபேசியும், 

தமக்கு இறைவனைத் தவிர வேறு பற்றுக்கோடு இல்லை என் பதைப் பல வழியில் மெய்ப்பித்தும், 

மெய்யடியார்களுடைய குற்றங் குறைகளைப் பொருட்படுத்தாமல் அவர்களை ஆட்கொண்டருளும் இறைவனுடைய அருட் பூரணத்தை வியந்து வியந்து போற்றியும், 

தம்மையும் அங்ஙனம் ஆட்கொண்டருளுமாறு, உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகிக் கல்லும் கனிந்துருகுமாறு, இறைவன் திருத்தாளில் மீண்டும் மீண்டும் முறையிட்டுக் கொள்வதைக் காணலாம்………… 

திருவாளர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், இவ்வருள் நூலை இடைவிடாது ஓதுமாறு தம்மைச் சார்ந்த அன்பர்களுக்குப் பல்கால் எடுத்தோதுவதை யான் கண்ணாரக் கண்டும் செவியாரக் கேட்டும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததுண்டு.” என விவரித்து மகிழ்கின்றார்கள்.

இப்பதிகம் 29-ம் பாடலில், தாயினும், சிறந்த தந்தையாகிய இறைவனின் திருவருளை வேண்டி விண்ணப்பிக்கின்றனர்.

தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம்

வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ

ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_

நேயா மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே 

     அருட்சத்தியாம் உமையின் காதலனே! பிள்ளைகள் தன் தாயை அடைந்து ஒரு பொருளைத் தருக என்று வேண்டினால் “சிறிது காலம் தாழ்த்தி” பிறகு கேட்டதைக் கொடுப்பாள்; ஆனால் தந்தையோ! அவரை பிள்ளைகள் வாயார வாழ்த்தினாலும், மனம் நோக ஏசினாலும் அவற்றைப் பொருள்படுத்தாமல் “அப்பா எனக்கு இப்பொருள் தருக” என வேண்டினால் காலம் தாமதிக்காமல் உடனே தருவார் என்பது உலக வழக்கு, இதை நினைந்தே உன் பிள்ளையாகிய நான் உன்னை அடுத்து என் எண்ணங்கள் நெறி பிறழாமல் அருள் நெறி சொல்ல வேண்டி நிற்கின்றேன்;  நீ மனம் இரங்கி அருள் செய்தல் வேண்டும் என விண்ணப்பம் செய்கின்றார்.

இப்பதிகம் முப்பத்தி இரண்டாம் பாடலில், இறைவனின் திருவடி நோகுமே என்று வள்ளற்பெருமான் வருந்துகின்றார். இறைவன்மீது வள்ளல் பெருமான் கொண்ட அன்பினை வெளிப்படுத்துவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்படச் சென்ற அந்நாள்

வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்குப்

பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ எனப் பேசி எண்ணிப்

பார்க்கின்ற-தோறும் என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே!

“அருட்ஜோதி ஆண்டவனே! எனது கண் போன்றவனே! அன்று மதுரை நான்மாடக் கூடலில் பாணபத்திரன் என்னும் அடியவனுக்காக, ஏமநாதன் என்னும் இசைவாணனின் செருக்கை அடக்க, விறகு வெட்டியாக உருவெடுத்து மதுரையின் வெப்பம் மிகுந்த வீதிகளில் வெயில் பட்ட மணலானது உன்னுடைய காலை உறுத்தும் படியாக நீ நடந்தே சென்று விறகு விற்ற துன்பத்தை நினைக்கும் தோறும், கருணை கடலான உனக்கே இவ்வளவு துன்பமா? என என்னுடைய உள்ளம் பதக் கின்றது” என்று வள்ளல் பெருமான் தனது இறை அன்பை வெளிப்படுத்துகின்றார்.

இப்படி அற்புதமான பல்வேறு விண்ணப்பங்களை இத் திரு அருண் முறையீட்டில் நாம் காண முடியும். அன்பர்கள் ஊன்றி இறைவனை நினைந்து, முறையிடுவதற்கு இந்நூல் ஒரு சிறந்த கருவி என்பதில் ஐயமில்லை

எனவே பல்வேறு அருள் சிறப்புகளைக் கொண்ட இன்நூலினை, அன்பர்கள் அனைவரும் இறைவன் முன்பு அனுதினமும் ஓதி பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்

 


அருள் நாம விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை திரு. ஆனந்த பாரதி

 அருள் நாம விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் இரண்டாம் நூலாகிய அருள் நாம விளக்கம்

பதிக அமைப்பு:

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாடல்கள் கொண்ட பாமாலை இது. “எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து ……. ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே” என்று பாடல் தோறும் பெருமான் தன் நெஞ்சத்தினை திருவொற்றியூர் திருக்கோயிலுக்கு அழைத்து, அங்கு இறைவனுடைய திருநாமத்தை மனம் உருகி ஓத அறிவுறுத்துகின்றார். 

இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் ” ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே” என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறைஉறுகின்றது.

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் உபய கலாநிதி பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் இரண்டாம் நூலாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் இரண்டாம் நூலாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரி நூல் இரண்டாம் திருமுறையுள் 21 வதாக இடம்பெற்றுள்ளது. 



ஏட்டுச் சுவடிகள்: 

இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, ஏடுகளின் எண்கள் 89, 90 என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

பதிகப் பொருண்மை

அருள் நாம விளக்கம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் இளமைக்காலத்தில் இயற்றப்பட்டது. 

வள்ளற் பெருமான் தன் மனத்தினை அழைத்து, மனமே? எதிர் பாலினத்தவரின் தேக இச்சையில் அழுந்தி வீன்காலம் கழிக்காமல், நான் சொல்வதைக் கேட்டு, என்னுடன் திருவொற்றியூர் திருத்தலத்திற்கு வந்து, அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன் மீது அவனுடைய அருள் நாமத்தினை மனம் உருகி தொடர்ந்து ஓதி, வழிபட்டு நின்றாலஇறைவனுடைய திருவருளைப் பெற்றுக் கொண்டு என்றும் பேரின்ப வாழ்வில் வாழலாம் என அறிவுறுத்துகின்றார்.

தேக இச்சையினாலே மிகவும் மெலிகின்ற மனமே, இறுதிக் காலத்திலே எமன் உன்னுடைய உயிரைக் கொண்டு போக நின்றபோது அனுபவித்த இந்த தேக சுகங்கள் உன் கூட வருமா? நிச்சயமாக வராது. 

உன் மரண காத்தில் உன்னோடு வருவது எது? அது இறைவனுடைய திருவருள், அந்த இறைவனுடைய திருவருள் இருந்தால் அந்த மரணத்தையே நீ வெற்றிக் கொள்ள முடியும். எனவே, என்னோடு திருவொற்றியூர் திருத்தலத்திற்கு உடன் வந்து, இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லி வழிபடுவாய். 

நீ மட்டுமா இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லி வழிபடு கின்றாய்?. பிரமனும், விஷ்ணுவும்,  இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லி அங்கே வழிபாடு செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை அவ்வாறு வழிபாடு செய்கின்ற போது உனக்கென்ன? 

என்னோடு வந்து நீயும் வழிபடு. என்று இப்பதிகத்தின் ஆறாவது பாடலில் இறைவனை வழிபட தன் நெஞ்சத்தை மிக அழகாக அழைக்கின்றார் வள்ளல் பெருமான்.

அப்பாடல் வருமாறு:

வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் 

    மறலி வந்து உனை வா என அழைக்கில்

ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் 

    கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து

போது வைகிய நான்முகன் மகவான் 

    புணரி வைகிய பூ_மகள் கொழுநன்

ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் 

    ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.


இப்பதிகத்தை ஓதி தேக மயக்கம் நீங்கி கடவுளிடத்திலேயே அன்பு பூண்டு, சன்மார்க்க ஒழுக்கத்தில் பயின்று பெருவாழ்வு வாழ்வோம். 


நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்

 


புண்ணிய விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை திரு. ஆனந்த பாரதி

                             புண்ணிய விளக்கம் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

  • திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் முதல் நூலாகிய புண்ணிய விளக்கம்

பதிக அமைப்பு:

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால்,  வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 11 பாடல்கள் கொண்ட பாமாலை இது. “நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்” என்று பாடல் தோறும் பெருமான் தன் நெஞ்சினை அழைத்து உறுதி கூறுகின்றார். இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் ”சிவாயநம என்றிடு நீறே” என மகுடம் பெற்று பாடல்களின் ஈற்றடி நிறைஉறுகின்றது.

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் உபய கலாநிதி பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், ப் பதிகத்தை இரண்டாம் திருமுறையின் முதல் நூலாக வைத்துச் சிறப்பித்தார். 

திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ. பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இன்னூல் இரண்டாம் திருமுறையின் முதல் நூலாகவே உள்ளது.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரி நூல் இரண்டாம் திருமுறையுள் 25 வதாக இடம்பெற்றுள்ளது. 

ஏட்டுச் சுவடிகள்: 

இம் மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 


பதிகப் பொருண்மை

புண்ணிய விளக்கம் என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் இளமைக்காலத்தில் இயற்றப்பட்டது. 

இறைவனுடைய திருவருளை ஆன்மாக்கள் பெற்று அனுபவிப்பதற்கு பல சாதனங்கள் உள்ளன. அதில் ஒரு முக்கிய சாதனம், இறைவனுடைய திரு நாமத்தைத் தொடர்ந்து நினைந்து இறைவன் மீது அன்பு செலுத்துவதாம்.

வாழையடி வாழையென வந்தத் திருக்கூட்ட மரபினர் யாவரும், இறைவன் திருநாமத்தினை நினைந்து இறைவனிடம் அன்பு செலுத்துகின்ற இந்த சாதனத்தை கைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அம் மரபு பற்றியே வள்ளல் பெருமானும் இங்கு இறைவனுடைய திருநாமத்தினை நினைந்து அத் திருநாமத்தை நினைந்து வழிபடுவதற்குரிய அடியார்களின் அடையாளமாக திருநீறு புனைந்து, இறை அன்பு செலுத்தினால் அவ்இறை அனுபவத்தினை பெறலாம் என்று இங்கு தன் நெஞ்சுக்கு ஆணையிட்டு, கலக்கம் தவிர்த்து, அமைதி செய்கின்றார் வள்ளல் பெருமான்.

இறைவனுடைய திருநாமங்களை நினைந்து தியானித்தல் முதலிய சாதனங்களை, உண்மையான இறைஅன்போடு கைக்கொள்வதினால்  உண்டாகும் நன்மைகளை வள்ளற்பெருமான் இந்த 11 பாடல்களில் பட்டியல் இடுகின்றார்.

இறைவனின் திருநாமங்களில் ஒன்றாகிய சிவாயநம என்னும். திருவைந்தெழுத்தினை ஓதி இறை அன்பு செலுத்தி திருநீறு அணிவதாகிய இச்சாதனத்தை செய்து வந்தால்.

இறைவனின் புகழைப் பாடுவதற்குரிய நல்ல ஞானமும், வறுமை இல்லாது வாழக்கூடிய நல்ல நிலையும், அதனால் பால் அன்னம் முதலிய சுகபோஜனங்களும், இறைவனுடைய திருவடியையே என்றும் நினைந்து வழிபடக்கூடிய அடியார்களின் சன்மார்க்க சங்க சேர்க்கையும், நல்ல சத்துவ குணமும், உயர்ந்த புகழையும் நாம் பெறலாம். எனவே மனமே நீ! மல மாயைகளால் உண்டாகின்ற துன்பங்களைக் கண்டு அஞ்சாதே! கீழ்க்கண்டவாறு அழகாக மொழிகின்றார் நம் பெருமான்.

பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும்

கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்

ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்

தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.

மேலும்,

இச் சாதன முதிர்வில், அதைக் கடைப்பிடித்து ஒழுகும் சுத்த ஆன்மாக்களுக்கு உண்டாகும் பெரு நிலைகளையும் வள்ளல் பெருமான் இங்கு பட்டியல் இடுகின்றார்

இச்சாதனத்தின் நிறைவு நிலையடைந்த ஆன்மாக்களுக்கு. மூவகை வினைகளும் அற்றுப் போகும், இறைவனை அடைந்து, அந்த இன்பத்தை அனுபவிப்பதற்கு உரிய நெறி அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக காண்பிக்கப்படும், அவர்கள் மெய்ஞ்ஞான வீட்டில் என்றும் இருந்து பேரின்பத்தை அனுபவிப்பதற்குரிய பெரு நிலையில் வாழ்வார்கள். என்று குறிப்பிடுகின்றார் நம் பெருமான்.

வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து

உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும்

ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்

செய்ய மலர்க் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே.

உயிர்களிடத்தில் கருணை, இறைவனிடத்திலேயே அன்பு, தன்னளவிலே ஒழுக்கம் என்னும், மூன்று முக்கிய சன்மார்க்க சாதனங்களில் ஒன்றாகிய இறைவனிடத்தில் அன்பைப் பற்றி இப்பதிகத்தில் வள்ளற் பெருமான் நமக்கு மிக தெளிவாக விளக்கி அருளுகிறார். இப்பதிகத்தை ஓதி இறைவனிடத்திலேயே பேரன்பு பூண்டு, சன்மார்க்க ஒழுக்கத்தில் நின்று பெருவாழ்வு வாழ முயலுவோம். 


நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு – 8-ம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா காலமுறைப் பதிப்பு - ஊரனடிகள்

 


அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...