வியாழன், 9 மே, 2024

“வள்ளலார் போற்றிய அருளாளர்கள்” – ஆனந்தபாரதி

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!.

வள்ளலார் போற்றிய அருளாளர்கள்” – ஆனந்தபாரதி

(2023 - வள்ளலார் 200 - மலேசிய விழாவுக்கு அளித்த ஆய்வுரை)

முன்னுரை:

திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் என்றும், சிதம்பரம் இராமலிங்க அடிகள் என்றும், பெரியவர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற நம்முடைய வள்ளல் பெருமானார், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானியாவார். சமரச சுத்த சன்மார்க்கம் என்பது சமயம் மதங்களை கடந்த ஒரு தனிக் கொள்கை என்றாலும், வள்ளற் பெருமான் சமய மதங்களைச் சமரச சுத்த சன்மார்க்கத்துக்கு அன்னியமல்ல அன்னியம் என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது சமய மத மார்க்கங்கள் எல்லாம் சுத்த சன்மார்க்கத்தினுடைய உட் பகுதிகளாக விளங்குகின்றன. அவைகள் அன்னியம் அல்ல, அவைகள் சுத்த சன்மார்க்கத்திற்கு தொடர்புடையவைகளாகவே இருக்கின்றன என்பது பெருமானுடைய கருத்து.

வள்ளல் பெருமான் சமரச ஞானி ஆதலால் சமய, மத மார்க்கங்களில் இருக்கின்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்களையும் உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களையும் கண்டிக்கின்றார்கள் என்றாலும், சமயங்களிலேயே சொல்லப்பட்டிருக்கின்ற உயர்ந்த கருத்துக்களை அவர்கள் மதிக்கின்றார்கள். அதனால் தனக்கு முன்பு சமய நெறியில் தோன்றிய அத்துணை அருளாளர்கள் உடைய உட்கருத்துக்களையும் வள்ளல் பெருமான் உள்வாங்கி, அந்த கருத்துக்களையும் அனுபவத்திலே உணர்ந்து அதற்கும் மேம்பட்ட நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்கள், அதனால் “வாழையடி வாழை என அடியார்கள் மரபில் தம்மையும் சுட்டுகின்றார்கள்”.

அந்த வகையிலே வள்ளல் பெருமானுக்கு வழிகாட்டியாக விளங்கிய அத்துணை ஞானிகளையும், வள்ளல் பெருமானார் நன்றியோடு நினைந்து தன்னுடைய அருட்பாடல்களிலேயே அவர்களை பாராட்டுகிறார்கள். தன்னுடைய உரைநடைகளிலேயே வர்களை குறிப்பிட்டு, அவர்களுடைய பெருமையை நமக்கு உணர்த்துகின்றார்கள். அந்த வகையிலே வள்ளல் பெருமான் போற்றிய அருளாளர்களின் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை இந்த கட்டுரையில் நாம் காண்போம்.

திருவள்ளுவர், திருமூலர்:

வள்ளல் பெருமான் திருவள்ளுவரையும், திருமூலரையும் போற்றுகின்றார், அவர்களின் நூல்களின் மீதும்  ஆழ்ந்த ஆர்வம் உடையவராக விளங்கி இருக்கிறார்கள். திருக்குறளை தன்னுடைய முதல் மாணவரான தொழுவூர் வேலாயுதனாரைக் கொண்டு வள்ளல் பெருமான் வகுப்பாக நடத்தினார்கள் என்கின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. திருக்குறளின் பெருமையைக் கருதி, திருக்குறளின் சில குறட்பாக்களையே தன்னுடைய திருவருட்பாவின் நெஞ்சறிவுறுத்தலிலேயே அப்படியே எடுத்து ஆள்கின்றார்.

கறங்கின் நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்

மருவும் குறட்பா மறந்தாய்  இந்த திருக்குறளை நினைந்து உன்னை செம்மைப்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று மனத்தை கேட்கின்றார் பெருமான்,

திருஅருட்பாவின் உபதேச குறிப்பிலேயே சாகாக் கல்வி என்கின்ற தலைப்பிலேயே சாகாக் கல்வியைப் பற்றி திருவள்ளுவர் தேவர் முதல் அதிகாரத்தில் சொல்லி இருக்கின்றார், அதை தக்க ஆசிரியர் மூலமாக தெரிந்து கொள்க என்று வள்ளற் பெருமான் நமக்கு உபதேசிக்கிறார்கள்.

தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்

திருமூலர் அருளிச் செய்த திருமந்திரத்திலே சன்மார்க்கத்தினுடைய உண்மை தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார்கள். சன்மார்க்கத்தினுடைய உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் திருமந்திரத்தை பார்க்கையில் விளங்கும் என்பது வள்ளல் பெருமானுடைய கருத்து. திருமூலர் சன்மார்க்க வழிநடந்த ஞானி ஆதலால் திருமந்திரத்தை வள்ளற்பெருமான் சாத்திரங்களிலேயே சிறந்தது என்றும் குறிப்பிடுகின்றார்.

இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தைக் கவனிக்கில்

சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம்…..இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.

இந்த குறிப்புகள் இரண்டும் வள்ளல் பெருமானுடைய உபதேச குறிப்பிலே காணப்படுகின்றன.

 நால்வர் பெருமக்கள்:

            சைவ சமய குரவர்களாக விளங்குகின்ற நால்வர் பெருமக்களின் மீதும் வள்ளற் பெருமான் அவர்கள் நான்கு மாலைகளை தன்னுடைய திருவருட்பாவில் அருளிச் செய்து இருக்கிறார்கள். அந்த நான்கு மாலைகளும் அந்த நால்வர் பெருமக்களுடைய சிறப்பை அறியாதவரும் அறிந்து கொள்ளும்படியாக அவர்களுடைய பெருஞ் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் வழியாக விளங்குகின்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் அருட்பெருமையை இந்த நான்கு ஆளுடைய மாலைகளும் (திருஅருட்பா 4ஆம் திருமுறை) நமக்கு தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல். திருவருட்பாவினுடைய முதல் திருமுறையிலேயே முதல் பதியமாக விளங்குகின்ற திருவடிப்புகழ்ச்சியிலேயே நால்வர் பெருமக்களின் அருளிச் செயல்களும், இறைவன் அவர்களுக்கு. உதவிய அருட்கொடையும் மிகச் சிறப்பாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்

ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்

ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்

ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்

அதுமட்டுமல்லாமல் திருஅருட்பாவினுடைய பல இடங்களிலே நால்வர் பெருமக்கள் உடைய பெருமைகள் பேசப்படுகின்றன.

அருணிகிரியார் குமரகுருபரர் நக்கீரர்:

முருகப் பெருமானுடைய அடியவர்களாகிய நக்கீரர் அருணகிரிநாதர், குமரகுருபரர் முதலியவர்களையும், வள்ளல் பெருமான் தன்னுடைய அருளிச் செயல்களிலே குறிப்பிடுகின்றார்கள். வள்ளல் பெருமான் அருளிய சுப்பிரமணியம் என்கின்ற விளக்கத்தில் சுப்பிரமணியம் என்கின்ற கடவுளின் உண்மை தத்துவத்தினை ஆராய்ந்து அந்த தத்துவத்தினுடைய வழி நின்று சித்தி முத்தி முழுவதையும். அடைந்த பெரியவர்களாக நக்கீரரையும், அருணகிரி நாதரையும், குமரகுருபரரையும் குறிப்பிடுகின்றார்.

அனாதி தொட்டு இன்றுவரை சென்ற நாட்களிலுள்ள அருணிகிரியார் குமரகுருபரர் நக்கீரர் முதலிய மகான்கள் தொண்டு செய்து, உத்தம ஞானிகளாய் நித்திய முத்தர்களாய் விளங்குகின்றார்கள். ஆதலால் நாம் யாவரும் அவ்வுண்மைக் கடவுளை வேதாகம விதிப்படி உண்மையாய்ப் பத்தி செய்து அவர் அருளைப் பெறவேண்டும்.” – சுப்பிரமணியம் விளக்கம் – உரைநடை

தத்துவராயர்:

யோகானந்த நிலை முழுவதும் கைவரப்பெற்ற நம்முடைய வள்ளற் பெருமான், குருதுரியம் என்கின்ற மிக உயர்ந்த யோக அனுபவ நிலையை அடைந்த மகான் என்று தத்துவராய சுவாமிகளைக் குறிப்பிடுகின்றார். தத்துவராய ஸ்வாமிகள்  தமிழகத்தில் வீரைநகர் என்னும் ஊரில் அவதரித்தவர் ஆவர், சுவாமிகள் “சசி வன்ன போதம்” முதலிய ஞான நூல்களை அருளியுள்ளார்கள், சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் உள்ள எறும்பூர் என்னும் இடத்தில். தத்துவராய சுவாமிகளுடைய மகா சன்னிதானம் இன்றும் மிகச் சிறப்பாகக் காணப்படுகின்றது.

இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்” -  உரை நடைப்பகுதி -மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது.

தத்துவராய ஸ்வாமிகள் குரு துரிய பதத்தை அடைந்து அந்த பதத்தை அடைவதற்குரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்கள் என்று வள்ளற் பெருமான் சுட்டி தத்துவராய ஸ்வாமிகளின் பெருமையை இந்த உபதேசத்தின் மூலம் உணர்த்துகின்றார்கள்.

 நிறைவுரை:

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் சமரச சுத்த சன்மார்க்க ஞானி ஆதலால் சமய மத மார்க்கங்களில் உள்ள பெரியோர்களுடைய உயர்ந்த அனுபவத்தையும் பாராட்டுகின்றார். மேலே நாம் ஒரு சில ஞானிகளுடைய பெயரையும் வள்ளல் பெருமான் வர்களைப் பாராட்டுவதைப் பற்றியும் சிந்தித்தோம். திருஅருட்பாவையும், திருவருட்பா உரைநடைப் பகுதியையும். மேலும் ஆராய்ந்தால் பல ஞானிகளை வள்ளற்பெருமான் புகழ்ந்து இருப்பதும், அவர்களுடைய அனுபவங்களை பாராட்டி இருப்பதும் மேலும் விளங்கும். அன்பர்கள் திரு அருட்பாவையும் உரைநடை பகுதியையும் மேலும் படித்து இக்கருத்துக்களை உணர்ந்து, பண்டைய ஞானிகளை போற்றி, பேதம் பாராட்டாமல் அவர்களுடைய அனுபவத்தை மதித்து திருவருட்பிரகாச வள்ளல் பெருமானி சமரச சன்மார்க்க வழிநடந்து பெருவாழ்வு பெறுவோம்.

நன்றி வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...