சனி, 22 மார்ச், 2025

விண்ணப்பக் கலிவெண்பா - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

 விண்ணப்பக் கலிவெண்பா - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

- திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த வாரம் நாம் காண இருக்கும். திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் இரண்டாவது நூலாகிய விண்ணப்பக் கலிவெண்பா.

பதிக்கத்  தலைப்பின் விளக்கம்:

கலிவெண்பா, வெண்பா வகைகளுள் ஒன்று. இஃது இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். இன்னிசைக் கலிவெண்பா பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும். நேரிசைக் கலிவெண்பாவின் இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் கண்ணி என்ற பெயரில் பலவாக வரும். அதன்படி, நேரிசைக் கலிவெண்பாவால் இயற்றப் பட்ட 417 கண்ணிகளைக் கொண்ட முறையீடு என்பதால் இப்பதிகம் விண்ணப்ப கலிவெண்பா என பெயர் பெற்றுள்ளது.

இவ்விண்ணப்பக் கலிவெண்பா, காப்பு செய்யுளுடன் அமைந்து இருப்பதினால்,  இது ஒரு தனிநூலாகக் கொள்ளத் தகுதி உடையது. அது கருதியே, திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை முதல் திருமுறையில் இரண்டாவது நூலாக வைத்துச் சிறப்பித்தார். 

இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும்  தொழுவூர் வேலாயுதனார் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, பிற்கால உரையாசிரியர்களுக்கு வள்ளல் பெருமானின் உண்மைக் கருத்தை அறிவதற்கு மிக உறுதுணையாக அமைந்துள்ளன என்பது இங்கு நினைக்கத்தக்கது.

பதிக அமைப்பு:

417  கண்ணிகளைக் கொண்ட இந்நூலில், முதல் 279  கண்ணிகளில், மூவர் பெரு மக்களால் பாடப்பெற்ற சைவத் திருத்தலங்களையும், அத் திருத்தல சிறப்புக்களையும், தலங்களின் வரலாறுகளையும்  எடுத்துக் கூறி அத் திருத்தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற  இறைவனை புகழ்ந்து  பாடுகின்றார் வள்ளற் பெருமான்.

1 முதல் 64 வரை உள்ள கண்ணிகளின் மூலம், சோழ நாட்டின் காவிரிக்கு வடகரையில் உள்ள  தேவாரத் தலங்களையும்,

65 முதல்191 வரை உள்ள கண்ணிகளில்  சோழ நாட்டின் காவிரிக்கு தென்கரையில் உள்ள  தேவாரத் தலங்களையும்,   

192 முதல் 193 வரை உள்ள கண்ணிகளில்  ஈழ நாட்டுத் தலங்களையும், 

194 முதல் 206 வரை உள்ள கண்ணிகளில்  பாண்டிய நாட்டிலுள்ள தலங்களையும், 

207 ஆம் கண்ணியில்  மலை நாட்டுத் தலமான திரு அஞ்சைக்களத்தையும், 208 முதல் 214 வரை உள்ள கண்ணிகளில்  கொங்கு நாட்டுத் தலங்களையும், 215 முதல் 236 வரை உள்ள கண்ணிகளில்  நடு நாட்டுத் தலங்களையும்,

237 முதல் 271 வரை உள்ள கண்ணிகளில்  தொண்ட நாட்டுத் தலங்களையும்,

272 ஆம் கண்ணியில்  துளுவ நாட்டுத் தலமான திருக்கோகரணத்தையும்,

273 முதல் 279 வரை உள்ள கண்ணிகளில் வட நாட்டுத் தலங்களையும்,

முறையே வழிபட்டு வணங்குகின்றார் வள்ளற் பெருமான்.   

280 முதல் 290 வரை உள்ள கண்ணிகளில் இறைவனை பொதுவில் வழிபட்டு விண்ணப்பிக்கிறார். 

291 முதல் 370 வரை உள்ள கண்ணிகளில் சிவானுபவத்திற்கு தடையாக நிற்பவைகளைப் பட்டியலிட்டு, அவைகளை நிவர்த்தித்து தன்னை ஆட்கொள்ள வேண்டும் என இறைவனிடம் விண்ணப்பிக்கிறார்.

371 முதல் 386 வரை உள்ள கண்ணிகளில் உயிர்களின் குற்றங்களையும் குணமாகக்கொண்டுக் கொண்டு இறைவன் அவைகளுக்கு கருணையை செய்த, அருள் வரலாறுகளை நினைவு கூறுகிறார்.

387 முதல் 417 வரை உள்ள கண்ணிகளில் இறைநிலையை அடைய தனக்குண்டான கோரிக்கைகளை முறையிட்டு,  

"என்னையும் நீன் தொண்டருடன் சேர்த்து அருள்க! நின் தாள்மலர் வாழ்க! என விண்ணப்பக் கலிவெண்பாவினை நிறைவு செய்கின்றார்.

"இவ்விண்ணப்ப கலிவெண்பாவை ஒருமையுடன் ஓதும் அடியார்கள் உளம் நெகிழ்ச்சி உற்று ஆன்ம  அனுபவம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை" என பதிப்புச் செம்மல் ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை அவர்கள் இப்பதிகத்தை குறித்த அனுபவத்தை தெரிவிக்கின்றார், எனவே பல்வேறு அருள் சிறப்புகளைக் கொண்ட இன்நூலினை, அன்பர்கள் அனைவரும் இறைவன் முன்பு அனுதினமும் ஓதி அருளையும் பொருளையும் பெற்று பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா - ஊரனடிகள் பதிப்பு

4. வடலூர் - வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவன பாடக் குறிப்புகள் - முனைவர் இராம. பாண்டுரங்கன்





 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...