சனி, 22 மார்ச், 2025

நெஞ்சறிவுறுத்தல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை - திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

 நெஞ்சறிவுறுத்தல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

- திரு. ஆனந்த பாரதி. பெங்களூரூ.

வணக்கம்,

திரு அருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம் முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும். திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் மூன்றாவது நூலாகிய நெஞ்சறிவுறுத்தல்.

பதிகத்  தலைப்பின் விளக்கம்:

கலிவெண்பா, வெண்பா வகைகளுள் ஒன்று. இஃது இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இருவகைப்படும். இன்னிசைக் கலிவெண்பா பதின்மூன்று அடிகள் முதல் பல அடிகளில் தனிச்சொல் பெறாமல் வரும். நேரிசைக் கலிவெண்பாவின் இரண்டிரண்டு அடிகள் ஒவ்வொரு எதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் கண்ணி என்ற பெயரில் பலவாக வரும். அதன்படி, நேரிசைக் கலிவெண்பாவால் இயற்றப் பட்ட 703 கண்ணிகளைக் கொண்ட  மனதிற்கான அறிவுரை என்பதால் இப்பதிகம் நெஞ்சறிவுறுத்தல் (நெஞ்சு - மனம், அறிவுறுத்தல் - நல் வழிப்படுத்தல்/உபதேசம்) என பெயர் பெற்றுள்ளது.

நெஞ்சறிவுறுத்தல், காப்பு செய்யுளுடன் அமைந்து இருப்பதினால்,  இது ஒரு தனிநூலாகக் கொள்ளத் தகுதி உடையது. இக் காப்புச் செய்யுள்கள் குறள் வெண்பாவில் அமைந்துள்ளது. 

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதனார், இப் பதிகத்தை முதல் திருமுறையில் மூன்றாவது நூலாக வைத்துச் சிறப்பித்தார். 

இந்நூலுக்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும்  தொழுவூர் வேலாயுதனார் வழங்கியுள்ளார். அவ்வடிக்குறிப்புகளே, பிற்கால உரையாசிரியர்களுக்கு வள்ளல் பெருமானின் உண்மைக் கருத்தை அறிவதற்கு மிக உறுதுணையாக அமைந்துள்ளன என்பது இங்கு நினைந்து போற்றத்தக்கது.

பதிக அமைப்பு:

இந்நூலின் காப்பு செய்யுள்களில் முறையை, நாத வடிவாம் கணபதியையும், ஒளிப்பிழம்பில் தோன்றிய முருக வேலையும் வாழ்த்துகின்றார் வள்ளல் பெருமான். 

703  கண்ணிகளைக் கொண்ட இந்நூலில், முதல் மூன்று கண்ணிகளில், நெஞ்சை அழைத்து அதைப் பாராட்டி, தான் கூறும் அறிவுரைகளைக் கேட்க வேண்டும் எனப் பணிக்கின்றார்.

4 முதல் 39 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவன் எதுவாய், எங்கனம் திகழ்கின்றான் என்பதை போற்றி புகழ்கின்றனர்.

40 முதல் 52 வரையிலுள்ள கண்ணிகளில்  இறைவன் திருவருள் பெற்ற சுத்த சன்மார்க்க ஞானிகளின் மெய்ப்புகழை பேசுகிறார்.

53 முதல் 59 வரையிலுள்ள கண்ணிகளில், இறைவனை நிருத்தன் என்றும் தீர்த்தன் என்றும், வண்ணன் என்றும், வினோதன் என்றும் பலவாறு புகழ்ந்து பரவுகின்றார்.  

60 முதல் 99 வரையிலுள்ள கண்ணிகளில், இறைவன் செய்யும் அதி அற்புதங்களை நினைந்து புகழ்ந்து சித்தனே என விளிக்கின்றார்.

இக் கண்ணிகளை ஆராய்ந்து ஆ. பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் பதிப்பித்த குறிப்புகள் மிகவும் பயன் உள்ளது, இனிவரும் குறிப்புகள்  அப்பெருமகனாரின் நெஞ்சறிவுறுத்தல் பதிப்பில் கண்ட குறிக்கப்பட்ட குறிப்புகளே!

100 முதல் ஒன்பது கண்ணிகளில் இறைவன் ஒரு கள்வனே போல் மறைந்து நின்றது. தொழிற்படுதலை மொழிந்து வைத்திருப்பது கண்டு மகிழ்க.

110 முதல் ஐந்து கண்ணிகளில் இறைவனைத் தந்திரம் கைதேர்ந்த ஒருவன் போல் இயங்குவதாக இயம்பியிருப்பது காண்க. 

115 முதல் 129 வரையிலான கண்ணிகளில் இறைவனை ஒரு தேவனே போல் தொழிற்படுவதாகச் சொல்லியிருப்பது காண்க, 121 முதல் ஒன்பது கண்ணிகளில் பத்திமையுடைய அடியார்களது தன்மையையும் அவர்கள் அடையும் அனுபவத்தையும் அறிவித் திருப்பது கண்டு மகிழ்க.

130 முதல் 160 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவன் சிவமூர்த்தம் சம்பந்தமாகப் போற்றப்பட்டிருப்பது காண்க.

161 முதல் நான்கு கண்ணிகளில் இறைவனை ஞானோபதேசம் செய்யும் தேசிக மூர்த்தியாக வருணித்திருப்பது காண்க.

165 முதல் பத்துக் கண்ணிகளில் இறைவனைத் தந்தையாகப் போற்றி யிருத்தலைக் காண்க.

175 முதல் 186 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவனைத் தாயாகப் போற்றியிருத்தலையும், 176, 186-இல் அடிகளார்தாம் நேரில் கண்டனுபவித்த கருணையை உரைத்தலையும் காண்க.

187 முதல் 207 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவனை அம்மானாகவும் தோழனாகவும் சுற்றமாகவும் நண்பனாகவும் அரசனாகவும் செல்வமாகவும் ஆண்டானாகவும் விவரித்திருப்பது கண்டு தெளிக.

208 முதல் 232 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவனுடைய வடிவத்தின் பேரழகு வருணிக்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்க. 

233 முதல் ஐந்து கண்ணிகளில் இறைவனது கண்கவரும் வனப்பில் திளைப்பதனால் உண்டாகும் பெரும்பயனைக் கூறுவது கண்டு தெளிக.

238 முதல் 268 வரையிலுள்ள கண்ணிகளில் இறைவன் அருள்தன்மையை வியந்தும் நெஞ்சின் ஈரமில்லாத பாழுந்தன்மைக்காக வருந்தியும் விவரித்திருப்பது காண்க.

269 முதல் 286 வரையிலுள்ள கண்ணிகள் மனத்தின் கேடுகெட்ட தன்மையை அதாவது விலங்குகட்கும் கீழ்ப்பட்ட தன்மையை விளக்குகின்றன.

287 - ஆம் கண்ணியில் நெஞ்சுக்கு இனிய சொல் சொல்லப்படுகிறது.

288 - முதல் நான்கு கண்ணிகளில் மனத்தின் பொய்யும் 

292 முதல் 396 வரையிலுள்ள கண்ணிகளில் ஒருவனுக்குப் பால் (Gender) விளைகின்ற பேரரிழிவினையும் பெருங் கேட்டினையும் விவரித்து, அம்மயக்கம் அறவே தெளிதற் பொருட்டு, ஒருவன் தன் மனத்திற்கு அந்தரங்கத்தில் சமயத்துக்குப் பொருத்தமாகச் சொல்லிக் கொண்ட வெறுங்கற்பனைகள் மேற்கொண்ட - உபதேசங்கள் உரைத்திருப்பது காண்க.

397 முதல் 417 வரையிலுள்ள கண்ணிகளில் இந்த நில உலகினை ஆட்டி வைக்கும் செல்வத்தின் மீதுள்ள பற்றினைக் குறித்துப் பகிர்ந்திருப்பது காண்க.

418 முதல் 431 வரையிலுள்ள கண்ணிகளில் மண்ணாசையைக் குறித்து மொழிந்திருப்பது காண்க.

432 முதல் 445 வரையிலுள்ள கண்ணிகளில் வீடு பேற்றிற்குத் தடங்கலாக நிற்கும் கோபம், கொலை, பொய்ம்மை முதலிய இழிகுணங் களை விவரித்திருப்பது காண்க.

446 முதல் 460 வரையிலுள்ள கண்ணிகள் இளமை நிலையாமையை விளக்குவன ஆகும். 

461 முதல் 524 வரையிலுள்ள கண்ணிகளில் உடம்பும் உடம்பைச் சார்ந்தெழுந்த பெற்றோர் முதல் எண்ணப்பட்ட உறவினர் தொடர்பும் பயன்படாது வெம்பி வீழ்வது விளக்கியிருக்கிறது.

525 முதல் 612 வரையிலுள்ள வகுத்துரைத்த இழிகுணங்களும் தாழ்ந்த ஒழுக்கங்களும் ஒருவனுடைய நெஞ்சின் உயர்ந்த தன்மைக்கு அழகல்ல என்பதை வற்புறுத்தியிருக்கிறது.

613 முதல் 622 வரையிலுள்ள கண்ணிகளில் ஆன்மாநுபவம் இத்தன்மையது என்று உணர்த்தியிருப்பது கண்டு கொள்க. 

623 முதல் 703 வரையிலுள்ள கண்ணிகளில் ஆன்மாநுபவம் அடையும் சன்மார்க்கம் உபதேசித்திருப்பது கண்டு மகிழ்க.

இந்நூலில் வள்ளல் பெருமான், திருக்குறள், தேவாரம் முதலிய அருளாளர்களின் அருள் மொழிகளை மேற்கொள் காட்டி பாடியிருப்பது, வள்ளற்பெருமான் பண்டைய அருளாளர்கள் மீது கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நமக்கு விளக்குவனவாக அமைந்துள்ளது.

நம்முடைய உலகியல் நோய்க்கு இன்னூல் மருந்து என்றும் சொல்லலாம், அப்படிப்பட்ட இந்த நெஞ்சறிவுறுத்தல் பகுதியை அனைத்து அன்பர்களும் ஒரு முறையாவது பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

அன்பர்கள் அனைவரும் அனுதினமும் இந்நூலினை ஓதி, அந்தக்கரண மயக்கங்கள் தெளியப் பெற்று, பேரானந்த வாழ்வின் வாழ வேண்டுகின்றேன்.

நன்றி வணக்கம்.

துணை நூல் பட்டியல்:

1. திருஅருட்பா முதல் பதிப்பு (1867) - தொழுவூர் வேலாயுதனார்.

2. திருஅருட்பா செம்பதிப்பு - ஏழாம் புத்தகம் - ஆ. பாலகிருஷ்ணன் 

3. திருஅருட்பா - ஊரனடிகள் பதிப்பு

4. நெஞ்சறிவுறுத்தல் - எளிய விளக்கம், - திருமதி. பா. இராஜேஸ்வரி 

   அம்மையார்





 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...