வணக்கம்,
திருஅருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புக்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம்முயற்சியில், இந்த வாரம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், முதல் திருமுறையின் நான்காவது பதிகமாகிய, சிவநேச வெண்பா
பதிகத் தலைப்பின் விளக்கம்:
நேரிசை வெண்பா என்பது தமிழில் மரபுச் செய்யுள் வகைகளில் ஒன்றான வெண்பாவின் துணைப்பா வகையாகும். நேரிசை வெண்பாவானது பொதுவான வெண்பாவின் இலக்கணங்களோடு நான்கு அடி உடையதாக இருக்கும்.
இரண்டாவது அடியில் தனிச்சொல் பெற்று வரும். நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் அடுத்த இரண்டும் வேறு வகை எதுகை உடையனவாகவோ இருக்கும். அதற்குத் தக, சிவ பரம்பொருள் மீது நேரிசை வெண்பாவினால் பாடப்பட்ட 100 செய்யுள்கள் அமைந்த பாமாலை, ஆதலினால் இது "சிவநேச வெண்பா" என்றும் பெயர் பெற்றது.
இப்பதிகம் இரண்டு காப்பு செய்யுள்களோடு அமைந்துள்ளதால் இது ஒரு தனி நூலாகக் கொள்ளத் தகுதி உடையது. இக்காப்புச் செய்யுள்களும் நேரிசை வெண்பாவில் அமைந்துள்ளது.
திருவருட்பாவின் முதல் பதிப்பின் ஆசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், தொழுவூர் வேலாயுதனார். அவர் இப்பதிகத்தை முதல் திருமுறையில் நான்காவது நூலாக வைத்துள்ளார். இப்பதிகத்திற்கு பல்வேறு அடிக்குறிப்புகளையும் வேலாயுதனார் குறிப்பித்துள்ளார். அவரின் இவ்வரியக் குறிப்புகளே பெருமானாரின் உண்மைக் கருத்துக்களை நாம் உணர நமக்குத் துணை செய்கின்றது. ஊரனடிகளின் வரலாற்று முறைப் பதிப்பில் இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் நான்காவது நூலாக அமைந்துள்ளது.
திருவருட்பா.
சிவநேசவெண்பா.
காப்பு.
நேரிசை வெண்பா.
திருச்சிற்றம்பலம்.
முன்னவனே யானை முகத்தவனே முத்திரலஞ்
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - மன்னவனே
சிற்பரனே யைங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்றான் சரண்,
வீறுடையாய் வேலுடையாய் வெற்புடையாய் விண்னுடையாய்
நீறுடையாய் நேயர்கடங் நெஞ்சுடையாய் - கூறு
முதல்வாவோ ராறு முகவாமுக் கண்ணன்
புதல்வாகின் றாளெம் புகல்,
திருச்சிற்றம்பலம்.
சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப்
பேர்சான்ற வுண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
நாடும் பரசிவமே நாயேனுக் கன்புரின்பா
னீடும் படிநி நிகழ்த்து.
பதிக அமைப்பு:
இப்பதிகத்தின் கலப்புச் செய்யுள்களில், முதல் செய்யுளில் நாத வடிவாம் மூத்தப் பிள்ளையாரையும், இரண்டாம் செய்யுளில் முருகவேலார் இளைய பிள்ளையாரையும் போற்றி வழிபடுகின்றார் பெருமானார்.
100 வெண்பாக்களைக் கொண்ட இப்பதிகத்தில் ஒவ்வொரு வெண்பாவும் விலைமதிப்பற்றவை. பக்தி சுவை நனிச் சொட்ட சொட்ட மதுரமென இனிப்பவையாக உள்ளது.
இப்பதிகத்தின் காப்புச் செய்யுள்கள் இரண்டிற்கு மட்டுமே பெருமானாரின் கையெழுத்து மூலங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என பதிப்புச் செம்மல் ஆ.பா அவர்களும் ஊரனடிகளாரும் குறிப்பிடுகின்றனர்.
இவ்வெண்பாக்கள் தோறும், தனக்கு இறைவன் விரைந்து திருவருள் செய்ய வேண்டும் எனவும், இறைவன் திருவருளால் அவரை நினைக்கின்றேன் எனவும், தனது மலம், மாயைக் குற்றங்களை இறைவன் நீக்கி அருள வேண்டும் எனவும் பெருமான் விண்ணப்பிக்கின்றார்.
சாதியின் கொடுமைகள் நீங்க வேண்டும் என பெருமான் இப்பதிகத்தின் 5ஆம் பாடலில் விண்ணப்பிக்கின்றார்.
"அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் இப்பாரில் சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம் சோதிஉரு வாக்குந் துணை."
இறைவன் வந்தியின் பிட்டு உண்ட வரலாறு, இறைவன் ஆலம் உண்ட அருட்செயல், சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய வரலாறு முதலியவற்றை முன்னோர்களின் வழி நின்று நினைவு கூறுகின்றார்.
அரிச்சந்திரனின் வரலாறும் 62ஆம் பாடலில் பெருமானாரால் நினைவு கூறப்படுகின்றது. ஒவ்வொரு வெண்பாவும் அதற்கே உரிய சிறப்பில் தேர்ந்தவை.
பொருள், சுவை, இலக்கிய, இலக்கண சுவைகளோடு அமைந்துள்ளது. அன்பர்கள் பலமுறை ஓதி ஓதி பயன்பட வேண்டிய பதிகம் இது. இப்பதிகம் இறை அன்பை வளர்க்கும். இறைவனின் பெருமையையும் அடியார்களின் பெருமையையும் உணர்த்தும்.
அன்பர்கள் ஓதி அருள்நலம் பெற வேண்டுகின்றேன்.
துணை நூல் பட்டியல்:
1. திருவருட்பா முதல் பதிப்பு. (1867 தொழுவூர் வேலாயுதனார்)
2. திருவருட்பா செம்பதிப்பு. (7ஆம் நூல் ஆ. பாலகிருஷ்ணன்)
3. திருவருட்பா வரலாற்று முறைப் பதிப்பு ஊரனடிகள்.
4. தமிழ் இலக்கிய அடிப்படை.
நன்றி வணக்கம்.
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக